ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!
டெல்லியின் கபேஷேரா பகுதியில் அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், ரோலர் கோஸ்டர் சவாரியில் இருந்து தவறி விழுந்து 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பிரியங்கா என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண் தனது வருங்கால கணவர் நிகிலுடன் ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் என்ற தனியார் பூங்காவிற்கு சென்றுள்ளார். சவாரியின் போது, ரோலர் கோஸ்டர் அதன் உச்சியை அடைந்தபோது, ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்து, பலத்த காயமடைந்துள்ளார்.
உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரியங்காவின் வருங்கால கணவர் நிகிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கேளிக்கை பூங்கா இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.