For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்" - #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!

04:49 PM Sep 22, 2024 IST | Web Editor
 நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்     tirupatiladdu தொடர்பாக பிரதமர் மோடிக்கு  ysjaganmohan கடிதம்
Advertisement

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் சமூக வலைதளத்தில் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..

“திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழல்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம், ஒருமைப்பாடு மற்றும் நற்பெயரை சீர்குலைக்க தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையை கவனமாகக் கையாளவில்லை என்றால், பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆந்திர அரசு தோல்வியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் மாநிலத்திற்கு தேவையான நிதிகளை சரியாக ஒதுக்கவில்லை. ஆந்திர மக்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் திருப்பதி தேவஸ்தானம் குறித்த பொய்களைப் பரப்புகிறார்.

திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யாகும். மேலும் இந்த பொய்ப் பிரசாரம் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கும் சாத்தியம் உள்ளது. இது முற்றிலும் பொய்யானது என்பதை அறிந்தும், மக்களின் மனதில் ஏற்படுத்தும் ஆழ்ந்த வலியைப் பொருட்படுத்தாமலும் சந்திரபாபு நாயுடு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் விவகாரங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் தலையிட இயலாது. திருப்பதி லட்டு விவகாரத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement