டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை இருக்கும். மேலும் ஜூன் 25 ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 30–40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மழையால் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜூன் 26 ம் தேதி வரை வடமேற்கு இந்தியா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கொங்கன்-கோவா பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லி மற்றும் சண்டிகர், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அண்டை பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.