மகளிர் உலகக்கோப்பை | இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், கொழும்புவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில மணி நேரம் மழை தொடர்ந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால், இந்த போட்டி 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. அதன்படி, தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் அடித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்மி குனரத்னே 34 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 20 ஓவர்களில் 121 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் ஆன லாரா வால்வார்ட் 60 ரன்களுடனும், தஸ்மின் பிரிட்ஸ் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லாரா வால்வார்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.