மகளிர் உலகக்கோப்பை | திடீரென குறுக்கிட்ட மழை.. இந்தியா- வங்கதேசம் இடையிலான போட்டி ரத்து!
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இதனிடையே, நவிமும்பையில் நேற்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதின. அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 27 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்மின் அக்தர் 36 ரன்களும், சோபனா மோஸ்டரி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீசராணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா மற்றும் அம்ஜோத் கவுர் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக ஆடி இந்த ஜோடி ரன்களை குவித்து வந்தநிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 8.4 ஓவர்களில் 57 ரன்கள் குவித்திருந்தது. மந்தனா 34 ரன்களும், அம்ஜோத் கவுர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மழை நிற்காமல் பெய்து வந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.