மகளிர் பிரீமியர் லீக் | அதிரடி காட்டிய ஷபாலி வர்மா, ஜெஸ் ஜான்சென்... பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்!
5 அணிகள் பங்கேற்றுள்ள 3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, பெங்களூரு அணி பேட்டிங்கில் களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோர் இறங்கினர்.
இதில் மந்தனா 8 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களம் கண்ட எல்லிஸ் பெர்ரி ரன்கனை குவித்தார். மறுபுறம் டேனியல் வயட்-ஹாட்ஜ் 21 ரன்களிலும், ராக்வி பிஸ்ட் 33 ரன்களிலும், ரிச்சா கோஷ் 5 ரன்களிலும், கனிகா அகுஜா 2 ரன்களிலும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். நிலைத்து ஆடிய பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 147 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 60 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடியது. தொடக்கத்தில் களமிறங்கிய மெக் லேனிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷபாலி வர்மா, ஜெஸ் ஜான்சென் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 80 ரன்களும், ஜெஸ் ஜான்சென் 61 ரன்களும் எடுத்தனர்.