பெண்களின் பாதுகாப்பு தொடர்பான தமிழக அரசின் திட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு
அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக
விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல்
நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும்
கல்வி, பணி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும்
பெண்கள் தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட
வேண்டும் எனவும் பெண் வழக்கறிஞர்களான கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபீக்
அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பெண்கள்
பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார்.
இதனிடைய குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் செலவு செய்து பல திட்டங்களை
செயல்படுத்தும் அரசை பாராட்டுகிறோம். ஆனால் இந்த திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும்
என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிமொழி மதி, திட்டங்கள்
செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு
அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.