மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் துரை வயது (47). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்த தாட்சாயினி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார்.
இதற்கிடையே துரை வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் தன் கணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் அருகில் இருந்த கட்டையால் மனைவியின் தலையில் அடித்ததால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் துரை அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் தன் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவர்தான் அடித்துக் கொலை செய்திருக்க கூடும் என மேல்செங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து தலைமறைவான துரையை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது தன் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் அருகில் இருந்த கட்டையால் அடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.