“சென்சார் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே...” - பெருமாளை கிண்டல் செய்யதாக எழுந்த புகாருக்கு சந்தானம் விளக்கம்!
சந்தானம் நடிப்பு மற்றும் பிரேம்ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். அதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த்,
நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக இப்படத்தில் இருந்து Kissa 47 என்ற பாடல் வெளியானது. அந்த பாடலில் ‘பார்ட்டி காசு கோவிந்தா...பார்ப்கான் டேக்ஸு கோவிந்தா’ என்ற வரிகள் இடம்பெற்றிருந்து. இந்த பாடல் பெருமாளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக வழக்கறிஞர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துனர்.
இந்த நிலையில் பெருமாளை கிண்டல் செய்யவில்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இது குறித்து படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் திருப்பதி பெருமாள் பக்தன். ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும் திருப்பதிக்கு நடந்து செல்வேன். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். இந்த படத்தின் பாடலில் பெருமாளை கிண்டல் செய்யவில்லை. சென்சார் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த பாடல் உருவாகியிருக்கிறது” என்று கூறினார்.