சிவகார்த்திகேயனுக்காக காமெடி ரோலில் நடிப்பீர்களா? - நடிகர் சூரி நச் பதில்!
நானே போனாலும் சிவகார்த்திகேயன் அழைக்க மாட்டார். இருவருக்கும் சராசரியான கதாபாத்திரம் கொண்ட கதை அமைந்தால் நாம் இருவரும் இணைந்து நடிப்போம் என அவரே கூறியிருக்கிறார். அதுபோன்ற கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம்.
காமெடியனாக நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்’ படத்தில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கி இருந்தார். இனிமேல், ஹீரோவாக மட்டுமே நடிங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, ‘கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடன், சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் காமெடி ரோலில் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சூரி, "நானே போனாலும் சிவகார்த்திகேயன் அழைக்க மாட்டார். இருவருக்கும் சராசரியான கதாபாத்திரம் கொண்ட கதை அமைந்தால் நாம் இருவரும் இணைந்து நடிப்போம் என அவரே கூறியிருக்கிறார். அதுபோன்ற கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம்" என்றார்.