For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசியலுக்கு வருவேனா...? நடிகர் விஷால் கொடுத்த பதில்...

11:28 AM Feb 07, 2024 IST | Web Editor
அரசியலுக்கு வருவேனா      நடிகர் விஷால் கொடுத்த பதில்
Advertisement

கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பாக அறிக்கையொன்று வெளியாகி உள்ளது.  

Advertisement

எம்ஜிஆர் முதல் விஜயகாந்த் வரை பல உலக பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தாலும் எம்ஜிஆர் தவிர புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த நடிகரும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது தமிழ்நாடு அரசியலின் வரலாறாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவர் 2024 தேர்தலில் போட்டியில்லை என்றும் 2026 தேர்தலில் தான் போட்டி என்றும் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் விஜய்யை அடுத்து நடிகர் விஷால் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக,  சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.  என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பக் காலத்திலிருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்,  "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்தகட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம்,  தொகுதி,  கிளைவாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களைப் படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.  வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement