2027 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் - ரோஹித் பங்கேற்பார்களா? - கங்குலி பதில்!
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சீனியர் வீரர்களாக இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா தொடர்ந்து ஓய்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக டி 20 உலககோப்பை வெற்றிக்கு பிறகு, இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான தங்களது ஓய்வை அறிவித்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பு, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர்.
இதனிடையே 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலககோப்பை தொடரில் இருவரும் பங்கேற்பார்களா? என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, “நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரையும் போலவே அவர்களிடம் இருந்தும் ஆட்டம் விலகிச் செல்லும். அவர்களும் விளையாட்டிலிருந்து விலகிச் செல்வார்கள். ஒரு ஆண்டுக்கு 15 போட்டிகளில் விளையாடி, 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது கடினம்.
இது குறித்து அவர்களுக்கு கொடுக்க என்னிடம் எந்த ஒரு அறிவுரையும் இல்லை. என்னைப் போல் அவர்களுக்கும் ஆட்டம் குறித்து நன்றாக தெரியும். அவர்களது ஓய்வு குறித்து அவர்களாகவே முடிவெடுப்பார்கள். விராட் கோலி மிகவும் திறமையான வீரர். அவருக்கு பதில் இந்திய அணியில் மாற்று வீரரை தேர்ந்தெடுக்க நேரம் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.