பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுமா? - ஜி.கே. மணி பதில்!
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி கே மணி சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ராமதாஸ் - அண்புமணி ராமதாஸ் இடையிலான சந்திப்பு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனை முன்னேற்றத்தின் அறிகுறியாக பார்க்கிறேன். இதே போன்று இந்த சந்திப்பானது ஒரு தீர்வை நோக்கிய சந்திப்பு. இருவரும் சந்தித்து பேசிய இந்த சம்பவம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.
ராமதாஸ் இந்த சந்திப்புக்குப் பிறகு தெம்பாக இருக்கிறார். ராமதாஸ்- அன்புமணி ராமதாஸை சந்திக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானது. ஆடிட்டர் குருமூர்த்தி, ராமதாஸை சந்தித்தது அரசியல் நோக்கம் அல்ல. இருவருக்குமான நட்பு” என்றார்.
தொடர்ந்து அவரிடம் பாஜகவுடன் கூட்டணி குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது மிக விரைவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்படும். நல்ல தகவலை ராமதாஸ் தெரிவிப்பார்” என்று கூறினார்.