“234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா?” - சீமான் கேள்வி!
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து காளைமாடு சிலை அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், "அரசியல் பதவிக்கானது அல்ல, அது மக்களின் உதவிக்கானது. லஞ்சம், ஊழல், சாதிய தீண்டாமை, தெருவெங்கும் மது போதையை தடுக்கமுடியவில்லை. ஆனால் கோடி கோடியாக கொட்டி தேர்தலை சந்திப்பார்கள். எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறோம். வேட்டையாட வேண்டும் என்று வேட்கையோடு இருக்கிறோம்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா? அந்த துணிவு நாம் தமிழருக்கு இருக்கிறது. இந்த மண்ணை நிச்சயமாக வெல்வோம், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உதிக்கட்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து புதிய விடியல் உருவானதாக வரலாறு எழுதுங்கள்” என்று கூறினார்.
முன்னதாக ஈரோடு பேருந்து நிலையம் அருகே கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் பணிமனையை சீமான் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.