For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸ்திரேலியா திரும்பினார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே!

09:51 PM Jun 26, 2024 IST | Web Editor
ஆஸ்திரேலியா திரும்பினார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே
Advertisement

14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட ஜூலியன் அசாஞ்சே சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார்.

Advertisement

விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டார்.  இந்த தாக்குதலில் ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் 2 பேர் உட்பட 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இது மட்டுமல்லாது பல ராணுவ ரகசியங்களையும் வெளியிட்டது அவருடைய விக்கிலீக்ஸ் ஊடகம்.  இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.  இந்த பின்னணியில் அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது.  இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர்.  கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தியது.  அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த  நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப்  “ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும்.  அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.  இவை குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்” என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

தொடர்ந்து,  அமெரிக்க உளவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரிவித்தனர்.  இதனை அடுத்து கடந்த திங்கள் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே அமெரிக்கா கிளம்பினார்.

இதையடுத்து அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக நடந்தது.  அப்போது,  அமரிக்காவை உளவு பார்த்தது,  ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே,  அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே, பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.

விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.  இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.  கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே,  அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

Tags :
Advertisement