சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி... எடப்பாடியில் அதிர்ச்சி!
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் வசித்து வரும்
விஜயகுமாருக்கும், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவர் காணவில்லை என மனைவி ரேவதி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை தொடர்ந்து, கணவர் விஜயகுமார் இறந்துவிட்டதாக மீண்டும் காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்து, முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளார். அதனை வைத்து போலி இறப்புச் சான்றிதழ் பெற்று, கணவர் விஜயகுமார் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்க எடப்பாடி வட்டாட்சியர் வருவாய் துறையினரிடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உயிரிழந்து விட்டாரா? என்று விசாரணை மேற்கொண்ட போது, அவர் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் மனுதாரர் ரேவதியையும், இறந்து விட்டதாக கூறப்பட்ட அவரது கணவர் விஜயகுமாரையும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த வட்டாட்சியர் வைத்தியலிங்கம், விசாரணை மேற்கொண்டு போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதை கண்டறிந்து, ரேவதியை எடப்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
இறந்து விட்டதாக கூறப்பட்ட கணவர் விஜயகுமார், அவரது மனைவி ரேவதி மீது எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.