கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!
நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலசுப்பிரமணியன். இவர் கிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 25 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி, கணவரிடம் தகராறு செய்து விட்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி மீண்டும் வீட்டுக்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் தூங்கிக்கொண்டு இருந்த போது முத்துலட்சுமி தனது கணவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பியுள்ளார். அவர் எழுந்த பின் தான் கொதிக்க வைத்த எண்ணெய்யை பாலசுப்பிரமணியன் மீது ஊற்றி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவந்திபட்டி காவல்நிலைய ஆய்வாளர் சுதா வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.