“பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” - செல்வப் பெருந்தகை கேள்வி!
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசு, வாய்ப்பு இல்லை என்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் இதற்கான பிரிவுகள் திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டதாகவும் கேரளா உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான விவசாயிகள், ஏழை எளியமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், பயிர்கள் மற்றும் வாழ்வாதார வசதிகள் முற்றிலும் அழிந்து போனது. பேரிடர் காலத்தில் உதவவேண்டியது அரசின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களை மனரிதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட செய்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப செய்வது தான் ஒரு அரசின் கடமை.
பெரு நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டி ரூ.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை? எனவே, குறைந்தபட்சம் அவர்களது வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய, பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.