Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி?

ஒரு யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
10:49 AM May 18, 2025 IST | Web Editor
ஒரு யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாடு மின்வாரியம் 2023&24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13 ஆயிரத்து179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணியில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற என்ற குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும்.

Advertisement

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டது என்று ஆட்சியாளர்கள் பெருமை பேசிக் கொண்டாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் கிட்டத்தட்ட 70% மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை, மின்சார உற்பத்தி ஆகியவற்றைக் கணக்கிட்டு, எவ்வளவு மின்சாரத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டும் என்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்படும். அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட அளவுக்குள் மின்சாரத்தை வாங்குவதன் மூலமாக மட்டுமே மின்சார வாரியத்தின் இழப்பைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அண்மைக் காலங்களில் இந்த விவகாரத்தில் மின்சார வாரியம் ஒருமுறை கூட ஒழுங்கைக் கடைபிடிக்கவில்லை என்பது தான் உண்மை.

2023&24 ஆம் ஆண்டில் மொத்தம் 7,373 கோடி யூனிட் மின்சாரத்தை பல்வேறு ஆதாரங்களில் இருந்து ரூ.42 ஆயிரத்து 575 கோடிக்கு வாங்க மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மின்சார வாரியமோ, அதை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தைக் கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கியுள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.14.36 வீதம் ரூ.13 ஆயிரத்து 179 கோடியை தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக செலவழித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

திட்டமிடப்பட்டதை விட மின்சாரத் தேவை அதிகரிக்காதா? அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக மின்சாரத்தை வாங்காவிட்டால் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உருவாகி விடாதா? என்பன போன்ற வினாக்கள் எழுவது இயல்பு தான். ஆனால், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு சராசரியாக 6% அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், எதிர்பாராமல் அதிகரிக்கும் மின்சாரத் தேவையின் அளவு 5%க்கும் குறைவாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால், 2023&24ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக வாங்கிய மின்சாரம் 12.44% ஆகும். உண்மையாகவே திட்டமிடப்பட்டதை விட இந்த அளவுக்கு கூடுதல் மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது என்றால், மின்தேவையை கணிக்கும் திறன் மின்வாரியத்திற்கு இல்லை என்று தான் பொருள். அப்படியானால், மின்சார வாரியத்தை நிர்வகிப்பவர்கள் அவரவர் பதவியில் தொடர்வதற்கு தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.

மின்சாரத் தேவை அதிகரித்ததைக் காரணம் காட்டி சுதந்திரமான மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து சராசரியாக ரூ.5.57க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்திற்கு ரூ.6.93 வீதம் விலை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கியிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவற்றிடமிருந்து 4068.6 கோடி யூனிட்டுகள் மின்சாரத்தை வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7.42%, அதாவது 302 கோடி யூனிட் குறைவான மின்சாரத்தையே மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது.

அதேநேரத்தில், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சராசரியாக ரூ.9.41 என்ற விலையில், 442.8 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே ரூ.4170 கோடி செலவில் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மின்வாரியமோ, அதே விலையிலான மின்சாரத்தை அனுமதிக்கப்பட்டதை விட, சுமார் 2 மடங்கு 860.6 கோடி யூனிட்டுகளை வாங்கியிருக்கிறது. இந்த வகையில் மட்டும் ரூ.3783 கோடியை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது.

மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் மத்திய மின் நிறுவனங்களிடமிருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட 302 கோடி யூனிட் மின்சாரத்தைக் குறைவாக வாங்கும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மின்சாரத்தை மின்வாரியம் வாங்குவதன் மர்மம் என்ன? என்பது கண்டறியப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து கூடுதலாக வாங்கப்பட்ட 412.2 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டும் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழக அரசு வாங்கியிருந்தால் ரூ.1802 கோடி அரசுக்கு மிச்சமாகியிருக்கும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின்திட்டங்கள் மட்டும் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டிருந்தால் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இருக்காது. தமிழகத்தின் மின்னுற்பத்தியே தேவைக்கும் அதிகமாக இருக்கும்.

ஆனால், அவ்வாறு செய்தால் தமிழ்நாடு தான் நன்றாக இருக்கும், தாங்கள் நன்றாக இருக்க முடியாது என்பதால் தான் தமிழக ஆட்சியாளர்கள் மின்திட்டத்தை செயல்படுத்த விரும்புவதில்லை. தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் அவர்களுக்கு இலாபம் என்பதால் அந்த வழக்கத்தையே அவர்கள் தொடர்கின்றனர். இது தான் மின்சார வாரியத்தின் இழப்புக்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.41,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதற்கு காரணம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது தான். ஒருபுறம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மக்களிடமிருந்து பறிக்கும் பணத்தை, தனியார் மின் நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்கள் வாரி இறைப்பதையும், அதற்கான வெகுமதியை அவர்களிடமிருந்து பெறுவதையும் அனுமதிக்க முடியாது.

இதில் ஒளிந்து கிடக்கும் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக 2023&24ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13 ஆயிரத்து 179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani RamadossElectricityPMKTamilNadu
Advertisement
Next Article