ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? - கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!
தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என தெரிவித்தார். இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல்வேறு கர்நாடக அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது பெரும் சர்ச்சையாக உருவெடுக்க, கர்நாடகத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்புக் கோரினால்தான் படத்தை திரையிட அனுமதிப்போம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. இதனையடுத்து தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் பேச்சு குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம்,
“நீங்கள் கமல்ஹாசனாக இருக்கலாம்... ஆனால் எந்தவொரு குடிமகனுக்கும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் மூன்று விஷயங்கள் உள்ளன. அவை நெலா, ஜலா மற்றும் பாஷே, (நிலம், நீர் மற்றும் மொழி)... இந்த மூன்று விஷயங்களும் எந்தவொரு குடிமகனுக்கும் முக்கியம். நாட்டின் பிரிவினை மொழி அடிப்படையில்தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே நீங்களும் (கமல்) அதன் முக்கியத்துவத்தை அறிவீர்கள்.
கமல் போன்ற ஒரு பொதுநபர், ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பிறக்கிறது என்று பொதுமன்றத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார். எந்த மொழியும், எந்த மொழியிலிருந்தும் பிறக்க முடியாது. அதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா?. இந்த கூற்றால் அமைதியின்மை, நல்லிணக்கமின்மையே நிலவுகிறது. கர்நாடக மக்கள் என்ன கேட்டார்கள்? மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் உருவாக்கிய சூழ்நிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். கர்நாடக மக்கள் இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்களா?”.
ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் எல்லாம் தீர்ந்திருக்கும். ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ?. உங்கள் கடிதத்தை ஏற்றுக் கொள்கிறோம். கன்னட மொழி மீது உங்களுக்கு இருக்கும் மாண்பு கடிதத்தின் மூலம் புரிகிறது. ஆனால் அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை மட்டும் இல்லை. கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையுடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் . அதுவரை தக் லைஃப் பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம்” என உத்தரவிட்டு வழக்கை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.