“தோனிக்கும் கோலிக்கும் ஏன் தண்டனை இல்லை?“ - திக்வேஷுக்கு ஆதரவு தெரிவித்த சேவாக்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடத்தை விதியின் பெயரில், ஒழுங்காக விளையாடும் அணிகளுக்கு ஃபேர் பிளே விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒழுங்கற்ற செயல்களில் மற்ற வீரர்களுடன் மோதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு நடத்தை விதி மீறலில் லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ‘டிக் தி நோட்புக்’ செலிபிரேஷனுக்காக ஏற்கெனவே ஐபிஎல் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டார். மீண்டும் அதே செலிபிரேஷனில் ஈடுபட்டதிற்காக முன்பு அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத் அணி உடனான ஒரு போட்டியில் மீண்டும் அவர் அதே செலிபிரேஷனில் ஈடுபட்டதற்காக ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை தோனி, கோலியின் செயல்களுடன் ஒப்பிட்டு திக்வேஷுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “திக்வேஷுக்கு விதிக்கபட்ட தடை உத்தரவு கொஞ்சம் அதிகம் தான். அவர் இப்போதுதான் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார்.
தோனி விதியை மீறி மைதானத்திற்குள் புகுந்துபோது, விராட் கோலி பலமுறை நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஏன் தண்டனை இல்லை? திக்வேஷ் இளம் வீரர், அவரை மன்னிப்பதுதான் சிறந்தது”
இவ்வாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.