“தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?” - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி!
தமிழ்நாடு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்தியை திணிக்கும் மாற்று வழியே மும்மொழிக் கொள்கை என தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாடு தற்போது இந்தியாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இதுதொடர்பாக பேசியுள்ளார். ஜனசேனா கட்சியின் நிறுவன நாளில் பேசிய அவர், நாட்டின் ஒருமைபாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில், மக்கள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, அவர்களுக்கு இந்தி வேண்டாம் என்றால், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?. அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன லாஜிக்?.
உத்தரபிரதேசம், பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வருவாயை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தி வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது அநியாயமாக இல்லையா? அவர்கள் பீகாரில் இருந்து வரும் தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? இந்த மனநிலை மாற வேண்டாமா?" என்று அவர் மேலும் கூறினார்.