“யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும், அடுத்த 10 நிமிடத்தில் பொறுப்பில் இருப்பதாக நான் அறிவிப்பேன்” - அன்புமணி பேச்சு!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று சோழிங்கநல்லூரில் இரண்டாம் கட்டமாக 5 மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி,
புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அதை ஸ்கேன் செய்து நிதி செலுத்தலாம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்றபின் க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து, 5 ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். கட்சிக்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது. எனவே உறுப்பினர் கட்டணமாக 5 ரூபாயுடன் கூடுதல் தொகையையும் உறுப்பினர்கள் செலுத்தலாம்.
சித்திரை மாநாட்டை நடத்தியது நான் அல்ல. உறுப்பினர்களாகிய நீங்கள்தான். சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே காரணம். சிறு பிரச்சனை கூட இல்லாமல் லட்சம் தொண்டர்கள் கூடினர். சித்திரை மாநாட்டுக்கு பின் இளைஞர்களின் மனநிலை மாறி உள்ளது. சித்திரை மாநாட்டின் பின் பாமகவில் இணைவதற்கு அவர்கள் மனதளவில் தயாராக உள்ளனர். பனையூர் அலுவலகத்தில் இருந்து உறுப்பினர்கள் அனைவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பேன்.
2 ஆண்டுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை தயார் செய்துவிட்டேன். ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாமல் இருந்தது. அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மயப்படுத்த உள்ளேன். சில குழப்பங்கள் நடக்கலாம். அவை அனைத்தும் சரியாகிவிடும். அவற்றை சரிபடுத்தி விடுவேன. திலகபாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன்.
கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும். நான் பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். பல பொறுப்புகளை நான் பார்த்து விட்டேன். நான் என்னை தலைவராக பார்க்கவில்லை. அடிமட்ட தொண்டனாகவே பார்க்கிறேன். உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருக்கிறேன். என் மனதில் நிறைய உண்டு. இங்கு மீடியாக்கள் இருப்பதால் என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை.
(மேடையில் சிவகுமாருக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார் அன்புமணி.) நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும். (( விழுப்புரம் மத்திய மா. செ. பொறுப்பில் இருந்து சிவகுமாரை இன்று காலை ராமதாசு நீக்கி இருந்தார். தற்போது அவருக்கு அதே பொறுப்பை குறிப்பிட்டு மா.செ என கடிதம் கொடுத்தார் அன்புமணி. ))
தனித்துப் போட்டியிடும் வகையில் ' மாற்றம் முன்னேற்றம் ' என்ற பிரசாரத்தை 2019லும் தொடர்ந்து இருந்தால் நாம் இப்போது ஆட்சியில் இருந்திருப்போம். ஆனால் அதை தொடர முடியாமல் போய்விட்டது. உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார். என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன். இதுவரையும் விட்டதில்லை, இனியும் விடமாட்டேன். உங்களில் யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும், அடுத்த 10 நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடருவதாக நான் அறிக்கை வெளியிடுவேன்.
யாரிடமும் சண்டை வம்பு தும்புக்கு போக வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அடுத்தடுத்த செயல் திட்டம் உள்ளது. உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன். எனது செயல் திட்டங்களை செயல்படுத்தும் சுதந்திரம் தற்போது எனக்கு கிடைத்துள்ளது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் துடித்துக் கொண்டுள்ளேன்” என தெரிவித்தார்.