பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - கிடைத்த தீர்வு... முடிந்தது டெண்டர்!
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பழைய குற்றால
அருவியானது யாருக்கு சொந்தம்? என்கின்ற பிரச்னை பொதுப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு இடையே நிலவி வந்தது. இந்நிலையில் பழைய குற்றால அருவியானது வனத்துறைக்கு சொந்தம் என முடிவு செய்யப்பட்டு, வனத்துறையினர் பழைய குற்றால அருவியை பராமரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு முழுவதும் இந்த பிரச்னை நிலவி வந்த நிலையில், பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணத்தை வசூல் செய்வதற்கான டெண்டர் விடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று இந்த டெண்டர் விடப்பட்டது. ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த டெண்டர் எடுக்கும் நிகழ்வில் இருவர் மட்டுமே பங்கேற்ற நிலையில், ஆரம்ப டெண்டர் தொகை ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் டெண்டரை மூர்த்தி என்பவர் 28 லட்சத்தி 30 ஆயிரத்து 500 ரூபாய்க்கு எடுத்தார்.