தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை பெறுகிறேன் | பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
01:58 PM Jan 02, 2024 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தான் புதிய சக்தியை பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Advertisement
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக விமான முனையத்தை பார்வையிட்டு, அங்குள்ள சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது :
இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது. திருவள்ளுவர் தொடங்கி பாரதியார் வரை பல்வேறு இலக்கியங்களை நமக்கு கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் நான் புதிய சக்தியை பெறுகிறேன்.
உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
திருச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் வரலாற்று சுவடுகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழின் பெருமையை பேசாமல் நான் வருவதில்லை. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. 40 மத்திய அமைச்சர்கள் 400 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். பெரிய பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.
புதிய விமான முனையத்தால், திருச்சியை சுற்றி வளர்ச்சி, வணிகம் பெருகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது. கட்டுமானம், சமூக சட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளோம். சாலை கட்டமைப்பு வசதிகளால், வணிகம், சுற்றுலா தமிழகத்தில் பெருகும். புதிய சாலை திட்டங்களால் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் பயன்பெறும். துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Next Article