For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்" - #TNPSC தலைவர் தகவல்!

07:07 PM Sep 14, 2024 IST | Web Editor
 விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்     tnpsc தலைவர் தகவல்
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சியின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (செப். 14) நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைப்பெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சி வருடாந்திர நாட்காட்டியில் இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்த திட்டமிட்டோம். 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 10,315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். அதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் பதிவு செய்யலாம். தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை நடக்கும். இந்த முறை தேர்வு நடவடிக்கைகளை முக்கிய கட்டங்களில் வீடியோ பதிவு செய்ய சொல்லி இருக்கிறோம். அதனால் இதுவரை எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா மையங்களிலும் மருத்துவ உதவிகள், மின்சார வசதி, பேருந்து வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த தேர்வுகளை கண்காணிக்க துணை ஆட்சியர் அளவில் பறக்கும் படை செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்ட #SitaramYechury -யின் உடல்!

காலி இடங்கள் குறைவாக இருந்தாலும் படித்து முடித்தவர்கள் ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதுகிறார்கள். விடைத்தாள்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் கூடுதல் ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement