Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன? மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

05:41 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

திமுகவை பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றியின் ரகசியம்! இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

மக்களுடன் முதல்வர் திட்டம் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நான் மக்களை சந்தித்தேன். அதற்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என பெயர் வைத்தேன். கொளத்தூர் தொகுதி மட்டும் இல்லை, எல்லா தொகுதிகளும் என் தொகுதி தான் என மனு வாங்கினேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதை நிறைவேற்றுவேன் என , மேடையிலே பெட்டியை பூட்டி எடுத்து சென்றேன். ஆனால் எதிர்கட்சிகள் ஆட்சிக்கே வரப் போவதில்லை, நிறைவேற்றப்ப போவதில்லை என கேலி செய்தார்கள்.

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2 லட்சத்து 212 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது‌. தேர்தல் முடிந்தவுடன் எங்கள் கடமை முடிந்தது என எண்ணாமல், இனிமேல் தான் கடமை தொடங்குகிறது என நினைத்து வேலை செய்தோம்.

இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்!

ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை! தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை! நல்ல குணமில்லை! பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை! தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை. மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!

திமுகவை பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்! இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்! மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம்! இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம், உருவாக்கிக் காட்டுவோம் " எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
CMO TamilNaduDharmapuriDMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTN Govt
Advertisement
Next Article