“சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை இருக்கிறது என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,லோக் சத்தா கட்சி மாநில தலைவர் ஜெகதீஸ்வரன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையிலிருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். விஜயகாந்த் தரப்பில் இவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கைத் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள் ; “அசாம் முதல்வரின் செயல் இந்திய நீதி பயணத்திற்கு இலவச விளம்பரத்தையே கொடுக்கிறது!” - ராகுல் காந்தி
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், "சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரைகள், பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் உள்ளிட்டவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளது. இதனால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது. மேலும், இந்த வழக்கில் ஒரு மனுதாரராக உள்ள எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை. தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துகிறார்" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது?” என கேள்வி எழுப்பினர். பின்னர், நேரலை ஒளிபரப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை மார்ச் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.