For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்? நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தரப்பு கூறியது என்ன?

03:10 PM Aug 12, 2024 IST | Web Editor
எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்  நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தரப்பு கூறியது என்ன
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில், தனது எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு, விளையாட்டு தீர்ப்பாயத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement

பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப் போட்டி வரை முன்னேறினார். தங்கப்பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.

இந்த சூழலில் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில்,  வினேஷ் போக்த்தின் எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு நடுவர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்?

வினேஷ் போகத் ஒரே நாளில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடியது, ஒலிம்பிக் வீரர்களின் கிராமத்திற்கும் போட்டி அரங்கிற்கும் இடையே உள்ள தூரம் ஆகியவையே எடை அதிகரிக்கக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதாவது மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடமான சாம்ப் டி மார்ஸ் அரீனாவிற்கும், ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடையே அதிக தூரம் இருந்ததாகவும் இதுவே எடையைத் திட்டமிட்டது போலக் குறைக்க முடியவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

வினேஷ் போகத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்

"ஒரே நாளில் அடுத்தடுத்த போட்டிகளில் வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில், மறுநாள் அவரது எடை 3  கிலோ அதிகரித்தது. வினேஷ் போகத் தனது எடையை குறைக்க இரவு முழுவதும் உறங்காமல் ஜாகிங் மற்றும் ஸ்கிப்பிங் செய்தார். மேலும் வினேஷ் போகத்தின் முடியை வெட்டி, உடலில் இருந்து இரத்தம் எடுக்கும் அளவிற்கு கூட சென்றனர். இரண்டாவது நாள் காலையில் வினேஷின் எடை 100 கிராம் அதிகரித்து இருந்த நிலையில், அதனால் வினேஷுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. 100 கிராம் எடை அதிகமாக இருப்பது என்பது மிகவும் குறைவு. இது வீரர்களின் எடையில் 0.1 முதல் 0.2 சதவீதம்வரை மட்டுமே. கோடைக்காலத்தின்போது மனித உடல் வீங்குவது எளிதாக ஏற்படலாம்.

ஏனென்றால், அதிக வெப்பம் இருக்கும் போது உயிர் பிழைக்க நமது உடல் அதிக தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இதனால் கோடைக்காலத்தில் இயல்பாகவே எடை அதிகரிக்கும். தவிர, ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்றுமுறை போட்டியிட்டதும் எடை அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். போட்டிகளுக்குப் பிறகு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வீரர் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை. இருந்தாலும் அவரால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவரது கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும்" என வினேஷ் போகத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement