மதுரை வந்துள்ள அமித்ஷாவின் இன்றைய பயண திட்டங்கள் என்ன?
மதுரையில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை பாஜக நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நள்ளிரவு மதுரை சென்றார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.