மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?
This News Fact Checked by ‘India Today’
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில், கும்பமேளா என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு பேர் குளிக்கும்போது ஒருவரையொருவர் முத்தமிடுவதையும், சிலர் அவர்களை அடிப்பதையும் வீடியோ காட்டுகிறது. மகாகும்பமேளா பற்றிய ஒரு பாடலும் பின்னணியில் கேட்கிறது.
"Why do you have to say all this?" என்ற முகநூல் பதிவை கீழே காணலாம்.
இதுகுறித்த விசாரணையில், பரப்பப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காணொளி மகாகும்பமேளாவின் காணொளி அல்ல, ஆனால் ஜூன் 2022 இல் அயோத்தியில் உள்ள சரயு நதியில் இருந்து எடுக்கப்பட்டது.
பேஸ்புக் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு
உண்மை சரிபார்ப்பு:
வைரலாகும் காணொளியை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் உதவியுடன் சரிபார்த்தபோது, இதேபோன்ற காட்சியைக் கொண்ட செய்திகள் 2022ம் ஆண்டில் பல ஊடகங்களால் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் 23, 2022 அன்று ஏபிபி லைவ் அறிக்கையின்படி, இந்த காணொளி அயோத்தியில் உள்ள சரயு நதியில் இருந்து எடுக்கப்பட்டது. சரயு நதியில் குளிக்கும்போது தனது மனைவியை முத்தமிட்டதாகக் கூறி ஒரு இளைஞன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. சரயு நதியில் உள்ள ராம் கி பவுடி காட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பரவலான எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அயோத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் என்றும் அறிக்கை கூறுகிறது. செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை கீழே காணலாம்.
இதேபோன்ற செய்திகளை NDTV மற்றும் The Quint போன்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. ஜூன் 22, 2022 அன்று ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்தபோது அயோத்தி காவல்துறை அளித்த பதிலும் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ளது. அயோத்தி காவல் நிலைய பொறுப்பாளர் இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதை கீழே காணலாம்.
சரயு நதியில் ஒரு இளைஞரை அடித்த சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நயாகாட் காவல் நிலையத்தின் பொறுப்பாளரான சப்-இன்ஸ்பெக்டர் டி.கே.மிஸ்ரா, அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 147, 323 மற்றும் 504 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தார். இந்த சம்பவம் ஜூன் 22 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் சரியான தேதி விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் தம்பதியினர் வழக்குப் பதிவு செய்யாததால், அவர்கள் அயோத்திக்கு வெளியில் இருந்து வந்த யாத்ரீகர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த சரியான தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த காணொளி பிரயாக்ராஜிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல என உறுதிப்படுத்த முடிந்தது.
கிடைக்கக்கூடிய தகவல்களிலிருந்து, பரப்பப்படும் காணொளி மகா கும்பமேளாவின் காணொளி அல்ல, மாறாக ஜூன் 2022 இல் அயோத்தியில் உள்ள சரயு நதியில் நடந்த ஒரு சம்பவம் என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.