தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
எஸ்.ஐ.ஆர். களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில் பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.