களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - கோயில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது, குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது, ஆடுதல், பாடுதல் என உற்சாகத்துடன் புது ஆண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி வருகிறது. அதேபோன்று இந்தாண்டும் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த பிரார்த்தனையின் போது, புதிதாக பிறந்துள்ள 2024-ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பிரார்த்தனைகளும், 2024 ஆம் ஆண்டில் எந்தவிதமான இயற்கை பேரிடர்களால் பொதுமக்கள் பாதிப்படைய கூடாது எனவும், உலகத்திற்கே தாங்கள் ஒரு சாட்சியாக வாழ வேண்டும் என மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் முருகனை தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பிரசித்தி பெற்ற உப்பிலியப்பன் கோயிலில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கேக் வெட்டி, விஜயகாந்த் பாட்டுக்கு நடனம் ஆடி இளைஞர்கள் மகிழ்ந்தனர். ஈரோட்டில் எவ்வித சமூக வேறுபாடுகளுமின்றி 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுக் கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
நியூஸ்7 தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!