For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate | சென்னைக்கு அருகே... 12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

02:54 PM Oct 16, 2024 IST | Web Editor
 weatherupdate   சென்னைக்கு அருகே    12 கி மீ  வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Advertisement

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்த லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது.

இந்த நிலையில், புயல் சின்னம் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை மையம் இன்று பகல் 1 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது.

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 350 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கி வரும். நாளை (அக்டோபர் 17) புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகில் கரையைக் கடக்கும்.”

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement