"தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்" - சீமான் பரபரப்பு பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ந் தேதி நடைபெறும் குடமுழுக்கினை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசியவர்,
“தமிழ்க்கடவுள் முருகன் கொயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி கேட்கிறோம். இங்கு 72 குண்டத்தில் யாகம் வளர்த்து சமஸ்கிரதத்தில் குடமுழுக்கு செய்ய இருக்கிறார்கள். ஒரு குண்டத்தில் கூட தமிழில் குடமுழுக்கு செய்ய மாட்டார்களாம். மேலும் தமிழன் சாதி மதத்தால் பிரிந்து கிடக்கிறான், சாராயத்தால் வீழ்ந்து கிடக்கிறான்.
மேலும் தமிழுக்கும், திமுகவிற்கும் தொடர்பில்லை. புதிய பாராளுமன்ற கல்வெட்டில் தமிழ்மொழி எழுதப்படாதபோது 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுக ஒரு கேள்வியும் கேட்கவில்லை பாஜகவும், காங்கிரஸூம் வேறு அல்ல, திமுகவும், அதிமுகவும் வேறல்ல. கொடிகள் மட்டும் தான்
வேறு, கொள்கை கோட்பாடு அனைத்தும் ஒன்றுதான். நான்கு கட்சிகளும் தமிழுக்கு எதிரானவர்கள் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்செந்தூர் முருகனுக்கு தாய்மொழி தமிழிலேயே குடமுழுக்கு நடத்தவேண்டும், இல்லையென்றால் வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு அன்று பெரும் படைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலை முற்றுகையிடுவோம். தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் திராவிடத்திற்கு தலை முழுக்கு என தெரிவித்துள்ளார்.