“பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வர மாட்டோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ்
பெண்களுக்கு எதிரான அரசாணையை நாங்கள் கொண்டு வர மாட்டோம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், அரசாணை 243-ஐ நிறைவேற்றி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில், முதல் நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கருணாநிதியுடன் எதாவது ஒரு மாநாட்டிலாவது பங்கேற்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஆனால், இங்கு காணொளி மூலம் அவர் நம்மிடம் பேசுவது போல ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கைகளில் அழுத்தம் இருந்தது. நியாயம் இருந்தது என்பதை அவர் அழகாக வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தியவர் முதலமைச்சர். நாங்கள் எப்படி பெண்களுக்கு எதிரான அரசாணையை வெளியிடுவோம் என நீங்கள் உணர வேண்டும். உங்களின் கருத்து என்னவாக இருந்தாலும் என்னிடம் கொண்டு வாருங்கள். சேர்ந்து பேசி தீர்வு காண்போம். உயர்ந்த துறையை சார்ந்த நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். இந்த மாநாடு உயர்ந்த மாநாடாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.