Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் மாறுவார் என நினைத்தோம்... ஆனால் இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

02:13 PM Jun 16, 2025 IST | Web Editor
Advertisement

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர்,

Advertisement

“விவசாயிகள் மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க முதலில் முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிடப் போகிறேன். 2021- 2022 ஆம் ஆண்டு முதல் டெல்டா மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டம், 276 கோடியே 84 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்காக சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு 82 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களுக்கும் நெற்பயிர் சாகுபடி செய்கிற விவசாயிகள் பயன்பெறும் வகையில் 132 கோடியே 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்திற்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் உழவர் பெருமக்களின் நலனுக்காக துவக்கி வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அறிவிப்பால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது, அதுபோல்
36 மாவட்டங்களில் இருக்கக்கூடிய சுமார் 8 லட்சம் விவசாயிகளுக்கு இந்த சிறப்பு
தொகுப்பு திட்டம் வழங்கப்படும். மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் தொகுதிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3,768 முகாம்கள் கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும்.

நகரப் பகுதிகளில் 13 அரசு துறையின் உடைய 43 திட்டங்கள் உங்களை தேடி வரும். இதுவே கிராமப் பகுதிகளில் 14 அரசுத்துறைகளுடைய 46 சேவைகள் உங்களைத் தேடி வரும். இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைச் திட்டத்தில் விடுபட்ட தகுதி உள்ள பெண்கள் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்களை வழங்கலாம். தரக்கூடிய விண்ணப்பங்கள் மீது 48 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். ஜூலை இரண்டாம் வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும்.

இதில் விண்ணப்பிக்க தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து இந்த திட்டத்தினை பற்றி உங்களிடம் விளக்குவார்கள். இப்படி நாளும், பொழுதும், அல்லும், பகலும் மக்களின் குறையை தீர்த்துக் கொண்டிருக்கும் நம்மளை பார்த்தால், எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரியத்தானே செய்யும். எதுவும் தெரியாமல் அறிக்கை வெளியிட்டு கொண்டு இருக்கிறார்.

இப்படி இவர் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் மத்திய அரசின் கைப் பாவையாக செயல்படும் ஆளுநர். தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை அமைக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். அதன் பிறகு கருணாநிதி பெயரில் அந்த பல்கலைக்கழகத்தை தொடங்க நானே தயங்கினாலும் கலைஞர் பேர்தான் வைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் மட்டும் இன்றி கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் என்னிடத்தில் வற்புறுத்தினார்கள்.

அதன் பிறகு தான் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை, எல்லோருடைய ஒப்புதல் உடன் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர் கல்விக்கான சட்டத்திற்கு ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரிடம் அனுப்பி வைத்த உடன் ஒப்புதல் கிடைத்து இருந்தால் தற்போது இந்த நிகழ்ச்சியிலேயே பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கலாம். அனுப்பி வைத்த கோப்பு 40 நாட்களுக்கு ஆகியும் தற்போது வரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறி இருப்பார் என நினைத்தோம். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை. கலைஞர் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக பலமுறை நினைவூட்டிய போது கூட, உயர் கல்வித்துறை அமைச்சரை ஆளுநரை சென்று பாருங்கள் என சொன்ன பிறகும், அவரைப் பார்க்க ஆளுநர் நேரம் வழங்கவில்லை. தற்போது வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

நேரம் கொடுத்தால் இதைக் கேட்பார்கள் என பயந்து சந்திக்க மறுக்கிறார். ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன வேலை முக்கியமானதாக இருக்கும். இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால், மத்திய அரசு மறுபக்கம் நிதி ஒதுக்காமல் பிரச்சனை செய்கிறது. இதையெல்லாம் சமாளித்து எத்தனையோ திட்டங்களை, பல சாதனைகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம். எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ, எதிர்கொள்ளாத நெருக்கடி இல்லை. மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். அரசியலில் நெருக்கடிகளையும், எல்லா எதிரிகளையும், அவர்களுடைய சதித்திட்டத்தையும் எதிர்த்து போராடியவன்.

அதையெல்லாம் முறியடித்து தான் இன்றைக்கு உங்கள் அன்போடு ஆதரவோடு முதலமைச்சராக ஆகியிருக்கிறேன். எதிர்க்கட்சியோட, அவர்கள் சொல்லக்கூடியது அவதூறாக இருந்தாலும், மத்திய அரசினுடைய ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநருடைய அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கக்கூடிய, துணிவும், கொள்கை உறுதியும், மக்களான உங்களுடைய ஆதரவும் எனக்கு இருக்கிறது.

அந்த ஆதரவை நீங்கள் எப்போதும் தர வேண்டும். கும்பகோணத்தில் கலைஞரின் பெயரில் அமைய இருக்கிற பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் இதுவரை அனுமதி தரவில்லை; பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தால் அதன் பிறகு ஆளுநரே படிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவோம்.” என தெரிவித்தார்.

Tags :
cm stalinDMKgovernor rn raviThanjavur
Advertisement
Next Article