“பாமகவின் சூழலை கண்டு தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்” - ஜி.கே. மணி பேட்டி!
பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பாமகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளும், ராமதாஸின் குடும்பத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இந்நிலையில் என் உயிர் மூச்சு உள்ள வரை நான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்றும், தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்க மாட்டேன் என்றும், செயல் தலைவராக பணியாற்ற அன்புமணி முன் வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். இது பாமக வட்டாரத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதே சமயம் ராமதாஸால் நீக்கப்படும் நிர்வாகிகள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்கள் என அன்புமணி கூறியுள்ளதால் பாமகவில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இருப்பிரிவுகளாக செயல்படும் நிலைக்கு பாமக தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி, நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் அய்யா எனக் கூறி பொது மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க வருகை தந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
“இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசை. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம்” என்றார்.