For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு விரைகிறார் ராகுல்காந்தி! மத்திய அரசு உடனடியாக உதவிட மக்களவையில் வலியுறுத்தல்!

01:25 PM Jul 30, 2024 IST | Web Editor
வயநாடு விரைகிறார் ராகுல்காந்தி  மத்திய அரசு உடனடியாக உதவிட மக்களவையில் வலியுறுத்தல்
Advertisement

"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்"  என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 51-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்டமலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு, பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல மக்களவையிலும் வயநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது..

” வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து தர வேண்டும். நிவாரணத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மீட்டுப் பணிகளில் மிகத் துரிதமாக செயல்படும் அதே நேரத்தில் மறுசீரமைப்பு பணிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை தற்போதிருந்தே தொடங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பல இடங்களில் மிகவும் ஆபத்தான எண்ணிக்கையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவசர காலத்தில் நாம் இருக்கிறோம். கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தர வேண்டும் ” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு விரையும் ராகுல்காந்தி

இதனிடையே, நிலச்சரிவால் சீர்குலைந்த வயநாட்டிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விரைகிறார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் விரைகின்றனர்.

Tags :
Advertisement