செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அந்த நீர் ஆதாரங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் எந்தெந்த ஏரிகளில் இருந்து, எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதை இங்கு காண்போம்.
புழல் ஏரி
தொடர் கனமழை காரணமாக 21.30 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19.69 அடியை எட்டியது. கிட்டத்தட்ட முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்து வடகரை, புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.29 அடியை எட்டியதையடுத்து காலை 8 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21 அடியில் 23.29 அடிக்கு நீர் நிரம்பியதையடுத்து 1,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,615 மில்லியன் கனஅடியில், தற்போது 3,156 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு 6,500 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
நீர்திறப்பைத் தொடர்ந்து சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியப்பேடு, திருநீர்மலை, அடையாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி
பூண்டி அணையின் நீர்மட்டம் 31.05 அடியை எட்டிய நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 31.05 அடியை எட்டியதைத் தொடர்ந்து நேற்று மதியம் அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் திறப்பு 5000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், பூண்டி ஏரியில் இருந்து தற்போது 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதை அடுத்து கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடை சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.