காவிரியில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக முழு கபினி அணை அதன் கொள்ளளவை எட்டவுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2280.84 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 545 கன அடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கபினி அணையில் தற்போது நீர்த்தேக்கம் நிரம்பி வருகிறது. கபினி நீர்த்தேக்கத்திற்கு வரும் தற்போதைய நீர்வரத்து 18-06-2025 அன்று 24000 கன அடிக்கும் அதிகமாக உள்ளது. மேலும், படுகைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி நீர்த்தேக்கத்திலிருந்து 25000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எந்த நேரத்திலும் ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.