For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது” - கர்நாடக அரசு திட்டவட்டம்!

05:33 PM Jul 12, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது”   கர்நாடக அரசு திட்டவட்டம்
Advertisement

தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரில், 2.25 டிஎம்சி மட்டுமே கிடைத்தது. மேலும், இம்மாதம், 31.2 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலையில், 9-ம் தேதி வரை, 1.99 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டது. எனவே, நடப்பாண்டு நிலுவை நீரின் அளவு, 14 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

எனவே, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. வினீத் குப்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய தயாளகுமார், குடிநீர் தேவைக்காக, நிலுவை நீரை விடுவிக்க வலியுறுத்தினார். அதை பரிசீலித்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், இம்மாதம் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு நாள்தோறும், 1 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 12) கர்நாடகா முதலமைச்சரின் கிருஷ்ணா இல்ல அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், கூடுதல் தலைமைச் செயலாளர் எல்.கே.ஆதிக் மற்றும் காவிரி பாசன பகுதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வரும் நாளை மறுநாள் (ஜூலை 14) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement