சூர்யாவின் ஆக்சன் விருந்து திருப்திபடுத்தியதா? - ‘ரெட்ரோ’ திரைவிமர்சனம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோ ஜூ ஜார்ஜ், நாசர் உட்பட பலர் நடித்த படம் ரெட்ரோ. 1960 -1993 காலகட்டத்தில் இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டு, அடுத்த கால கட்டத்துக்கு நகர்கிறது.
இப்படத்தில் தூத்துக்குடி தாதா ஜோ ஜூ ஜார்ஜின் வளர்ப்பு மகனாக சூர்யா நடிக்க. கோல்ஸ் பிஸ் என்ற கடத்தல் பொருள் தொடர்பாக அப்பா, மகன் இடையே மோதல் வருகிறது. சூர்யா திருமணத்தன்று அவர் மனைவி பூஜா ஹெக்டேவை மாமனார் ஜோஜூ கொல்ல முயல, அவர் கையை வெட்டி ஜெயிலுக்கு போகிறார் சூர்யா. கோபித்து கொண்டு காணாமல் போகிறார் பூஜா.
சில ஆண்டுகள் கழித்து பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பதை அறிந்து ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் சூர்யா. அங்கே சென்றால் ரப்பர் தோட்ட உரிமையாளரன நாசரும், அவர் மகன் விதுவும் தோட்ட தொழிலாளர்களை அடிமையாக நடத்துவதை அறிந்து கொதிக்கிறார். அவர்களுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தாரா? பூஜா ஹெக்டேவுடன் இணைந்தாரா? அப்பா, மகன் மோதல் என்னாச்சு? கோல்டு பிஸ் கண்டுபிடிக்கப்பட்டதா? என்பதுதான் ரெட்ரோ கதை.
ஆரம்பித்த சில நிமிடங்களில் இது பக்கா ஆக்சன் படம் என்று தெரிந்து விடுகிறது. அதற்கேற்ப பல கெட்டப்களில் பல ஆக்சன் சீன்-களில் கலக்கி இருக்கிறார் சூர்யா. அவருக்கும் , பூஜாவுக்குமான காதல் சீன்-கள், ஜெயராமுடனான காமெடி சீன்-கள் ரசிக்க வைக்கிறது. தோட்ட தொழிலாளர் விடுதலைக்காக போராடுவது டச்சிங்..கன்னிம்மா பாடலில் டான்-சிலும் கலக்கி இருக்கிறார். ஆனாலும், சூர்யா மீதான சமூக பொறுப்புள்ள நிஜ இமேஜ் காரணமாக அவர் கேரக்டருக்காக தம் அடிப்பதை, சரக்கு அடிப்பதை ஏற்க முடியவில்லை.
பூஜா ஹெக்டே அழகாக இருக்கிறார். சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார். வில்லனாக வரும்ஜோ ஜு ஜார்ஜ் மேனரிசம். டயலாக் செம. ஜெயராம் மாறுபட்ட கெட்டப்பில் காமெடி செய்து இருக்கிறார். ஆனாலும் , நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் வீணடிக்கப்பட்டுள்ளனர். படத்தில் இரண்டாவது நாயகன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். பாடல், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஆனாலும், சில இடங்களில் சத்தம் ஓவர். ஸ்ரேயா பாடல் காட்சி வீண். ஸ்ரேயாஸ் ஒளிப்பதிவு அந்தமானை அழகாக காண்பித்து இருக்கிறது.
படத்தின் நீளம் அதிகமோ என சில நேரம் தோன்றுகிறது. ஆக்சன் காட்சிகள் அதிரடி என்றாலும் சில சமயம் ஓவர் டோஸ். பெரும்பாலான காட்சிகளில் சண்டை போடுகிறார்கள், சண்டைக்கு தயாராகிறார்கள். பல சண்டை காட்சி புதுமை என்றாலும் ஒரு கட்டத்தில் போராடிக்கிறது. சூர்யாவுக்கும் அந்த அடிமை மக்களுக்குமான உறவு, காட்சிகள் உருக்கமாக அமைந்துள்ளது.
சிரிப்பை மையமாக வைத்து சொல்லப்பட்ட வசனங்கள், சீன்கள், தம்மம் விளக்கம், கிளைமாக்ஸ் சிரிப்பு அருமை. பக்கா ஹீரோயிச கதை. அதை ரசித்து எடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆக்சன் பிரியர்களுக்கு, சூர்யா ரசிகர்களுக்கு ரெட்ரோ விருந்து.
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்