”போர் பிரச்சினைகளைத் தீர்க்காது” - போப் லியோ கருத்து!
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை சரணடைய கோரி எச்சரித்து வந்தார். அதற்கு ஈரானிய உச்ச தலைவர் கமேனி, அமெரிக்க இந்த மோதலில் தலையிட்டால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என பதில் எச்சரிக்கை கொடுத்தார்.
தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி, போர் விமானங்கள் பத்திரமாக திரும்பியதாக கூறினார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் வெற்றிகரமானது தாக்குதல் என்றும் தெரிவித்தார். இந்த தாக்குதலில் அசம்பாவிதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கதிர்வீச்சு கண்டுபிடிப்பாளர்களால் எந்த கதிரியக்க வெளியீடும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நாட்டின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையம் கூறியதாக ஈரானிய ஊடங்களில் செய்திகள் வெளியாகின.. தொடர்ந்து ரஷ்யா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கு கணடனம் தெரிவித்தன.
War does not solve problems; on the contrary, it amplifies them and inflicts deep wounds on the history of peoples, which take generations to heal. No armed victory can compensate for the pain of mothers, the fear of children, or stolen futures. May diplomacy silence the weapons!…
— Pope Leo XIV (@Pontifex) June 22, 2025
இந்த நிலையில் போர் பிரச்சினைகளைத் தீர்க்காது என கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “போர் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, அவற்றைப் பெரிதாக்கி மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. அவை பல தலைமுறைகளாக குணமடைகின்றன. எந்த ஆயுத வெற்றியும் தாய்மார்களின் வலியையோ, குழந்தைகளின் பயத்தையோ அல்லது திருடப்பட்ட எதிர்காலத்தையோ ஈடுசெய்ய முடியாது. ராஜதந்திரம் ஆயுதங்களை மௌனமாக்கட்டும்! நாடுகள் தங்கள் எதிர்காலத்தை வன்முறை மற்றும் இரத்தக்கறை படிந்த மோதல்களால் அல்லாமல் அமைதியான முறையில் வடிவமைக்கட்டும்” என்று தெரிவித்தார்.