"சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்... 'பராசக்தி' அதை பற்றிய கதை அல்ல" - இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி
ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, லீலா, ரவி மோகன், பாசில் ஜோசப் உள்ளிட்டோர் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
"பராசக்தி படப்பிடிப்புக்கு எந்த பிரச்னையும் இல்லை. படப்பிடிப்புக்கு இன்னும் 40 நாட்கள் பாக்கி உள்ளது. மதராஸி படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை சென்றுள்ளார். அவர் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும். இந்த படம் இந்தி திணிப்பு பற்றிய கதை அல்ல"
இவ்வாறு இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.