ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர். அதன்படி 9 மணி நிலவரப்படி 10.95 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
வாக்களிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.