விஜய்-க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் - துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிப்பு!
தவெக தலைவர் விஜய், தனது நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அண்மையில் கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வழியாக பயணித்தார். அப்போது அவர் நடத்திய ரோடு ஷோவில், தொண்டர்கள் பலர் பங்கேற்றதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர் அங்கிருந்து சென்ற பின்பும் கூட ரோடு ஷோ நடத்திய சாலை முழுவதும் காலணிகளாக தென்பட்டன. மேலும் அவரது தொண்டர்களால் அங்குள்ள சாலைத் தடுப்புகள் கீழே தள்ளிவிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் விஜய், படப்பிடிப்பை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது ஏராளமான தொண்டர்கள் அவரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜ் என்பவர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவிக்க வருகை தந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜை சால்வை அணுவிக்க விடாமல் தடுத்ததுடன் துப்பாக்கியை காட்டி அவரை வெளியேற்றினர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய்யின் பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி விரட்டியடித்த சம்பவம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.