இத்தாலியில் வெடித்து சிதறிய எரிமலை - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள் !
ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த எரிமலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த எரிமலையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.
இந்நிலையில், எட்னா எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதன் விளைவாக கரும்புகை வெளியேறிய காரணத்தால் சாம்பல் மேகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் எரிமலையில் இருந்து உயிரை கையில் பிடித்து ஓடினர். எரிமலை வெடிப்பு தொடருவதால் பாதுகாப்பு கருதி அபாயகட்ட இடங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சிசிலி தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அதேவேளை, எரிமலை வெடிப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.