“எப்பொழுதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” - டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு!
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூவை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையில் இந்த பயணம் என்னை இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வரும் என்று நான் நினைக்கவில்லை. இந்த பயணம் என்னை சோதித்தது, என்னை கட்டமைத்தது, வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது.
இந்த வெள்ளை நிறத்தில் ஆழமான உணர்வு உள்ளது. அங்கிகாரம் இல்லாத, நீண்ட நாட்கள், சிறிய தருணங்களை யாரும் பார்க்கவில்லை. ஆனால் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
இதில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானல்ல. ஆனால் இந்த முடிவு சரியானது என தோன்றுகிறது. இதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன். அதற்கு ஈடாக நான் எதிர்பார்த்ததை விட இது எனக்கு மிக அதிகமாகத் திருப்பித் தந்துள்ளது.
கிரிக்கெட்டிற்கும், என்னோடு மைதானத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வழிநெடுகிலும் என்னை மகிழ்வித்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்பொழுதும் எனது டெஸ்ட் வாழ்க்கையை புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 9230 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 நாட் அவுட் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார். இதில் 1027 பவுண்டரிகளும், 30 சிக்சர்களும் அடங்கும்.
2024 டி20 உலகக் கோப்பையை வெற்றிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், விராட் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.