For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை" - தவெக அறிவிப்பு!

11:21 AM Jun 18, 2024 IST | Web Editor
 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை    தவெக அறிவிப்பு
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால்,  அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  இதனைத் தொடர்ந்து,  ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதே போல  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  இதனையடுத்து பாமக சார்பில் சி.அன்புமணி  போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.  இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் விரைவில் கழகத்தின் கொள்கைகள்,  கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கனைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு,  அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள்,  தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று,  வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு,  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக,  வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்,  தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :
Advertisement